மேற்கு வங்காள ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு நடிகையின் மற்றொரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். அர்பிதா முகர்ஜியின் ஒரு வீட்டில் ரூ.21 கோடிக்கு மேற்பட்ட ரொக்கமும், இன்னொரு வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டன. ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் சிக்கின. இந்நிலையில், அர்பிதா முகர்ஜி அளித்த தகவலின்பேரில், கொல்கத்தாவில் சினார் பார்க் பகுதியில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சாவி இல்லாததால், மத்திய படை அதிகாரிகள் முன்னிலையில் கதவை உடைத்தனர். அந்த வீட்டிலும் பணம் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், அங்கு என்ன மாதிரியான செயல்பாடுகள் நடந்தன என்று பக்கத்து வீட்டாரிடம் விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

