

பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு செயல்பட்டு வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், அந்த அரசு பெரும்பான்மையை இழந்தது. கடந்த 23-ந் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.
இதையடுத்து கடந்த 26-ந் தேதி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் வஜூபாய்வாலா உத்தரவிட்டார். இந்த நிலையில் 29-ந் தேதி (அதாவது நேற்று) பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று எடியூரப்பா அறிவித்தார்.
அதன்படி கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், முதல்-மந்திரி எடியூரப்பா, தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். தீர்மானத்தின் மீதான முடிவுக்கு வந்த பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா தனது அரசு மீதான பெரும்பான்மையை காட்டினார். இதையடுத்து, சபாநாயகர் ரமேஷ்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்புக்கு பாஜக எம்.எல்.ஏ விஸ்வேஸ்வர் ஹெக்டே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.