காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு மாணவர் சாவு

கொள்ளேகாலில் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு மாணவர் உயிரிழந்துள்ளார். அவர் நண்பர்களுடன் சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூரு மாணவர் சாவு
Published on

கொள்ளேகால்:-

பெங்களூரு மாணவர்

பெங்களூருவை சேர்ந்தவர் புனித் (வயது 18). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.யூ.சி. படித்து வந்தார். இந்த நிலையில் புனித் தனது நண்பர்களுடன் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் கொள்ளேகால் தாலுகா சிவனசமுத்திரத்தில் உள்ள பரசுக்கி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் பரசுக்கி நீர்வீழ்ச்சிக்கு அருகே காவிரி ஆற்றில் புனித் தனது நண்பர்களுடன் நீச்சல் அடித்து குளித்து கொண்டிருந்தார்.

அப்போது ஆற்றில் ஏற்பட்ட சுழியில் புனித் சிக்கியதாக தெரிகிறது. இதனால் அவரால் நீச்சல் அடிக்க முடியவில்லை. மேலும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

ஆற்றில் மூழ்கி சாவு

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், புனித்தை காப்பாற்ற முயன்றனர். அவர்களாலும் புனித்தை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக கொள்ளேகால் போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரும், நீச்சல்

வீரர்களும் வரவழைக்கப்பட்டனா.

அவர்கள் காவிரி ஆற்றில் குளித்து புனித்தை தேடினார்கள். ஆனால் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு படையினர் புனித்தை பிணமாக மீட்டனர். அவர் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புனித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து கொள்ளேகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் புனித்தின் பெற்றோர் கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள், புனித்தின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com