

மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் 3 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு, கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அரசு உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.