

போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தீஷ்கார் எல்லையையொட்டி அமைந்துள்ள மண்டலா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தங்களது துப்பாக்கியால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்தது.
நேற்று அதிகாலையில் இந்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது. இதில் ஒரு பெண் உள்பட 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன