பீகார் சட்டசபை தேர்தல்; இனிப்பு தயாரிக்கும் பணியில் பா.ஜ.க. தொண்டர்கள்

பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. தொண்டர்கள் இனிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தல்; இனிப்பு தயாரிக்கும் பணியில் பா.ஜ.க. தொண்டர்கள்
Published on

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல் முறையே கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 ஆகிய நாட்களில் நடந்து முடிந்தது. 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் கடந்த 7-ந் தேதி நடந்தது.

தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டன. 71 உறுப்பினர்களுக்கான முதற்கட்ட தேர்தலில் 55.69 சதவீதமும், 94 உறுப்பினர்களுக்கான 2-வது கட்ட தேர்தலில் 53.51 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன என்று ஆணையம் தெரிவித்தது.

78 தொகுதிகளுக்கு நடந்த 3-வது கட்ட தேர்தலில் 56.12% வாக்குகள் பதிவாகி இருந்தன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த முறை வெற்றி பெற்ற பின் மீண்டும் நிதிஷ் குமார் தலைமையிலேயே பீகாரில் ஆட்சி அமையும் என ஐக்கிய ஜனதாதள கட்சியுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. கூறியுள்ளது.

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் பா.ஜ.க.வினர் உள்ளனர். இதனை முன்னிட்டு பாட்னா சாஹிப் தொகுதியில் அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்பு தயாரிக்கும் பணியில் உற்சாகமுடன் ஈடுபட்டு உள்ளனர். இந்த இனிப்புகளை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்புக்கு பின்னர் தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com