பீகாரில் 65% இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றம்

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75% ஆக உயரும்.
பீகாரில் 65% இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றம்
Published on

பாட்னா,

நாட்டிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு விவரங்களை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட பிறகு சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார், "பீகாரில் தற்போது அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்படும்" என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதன்படி, பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% ஆகவும், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு 13 % -ல் இருந்து 20 சதவிகிதம் ஆகவும் உயர்த்தப்படும். பழங்குடியினர் இடஒதுக்கீடு 2 சதவிகிதமாக நீடிக்கும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான(EWS) 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75% ஆக உயரும் என்ற தகவலும் நிதிஷ் குமார் உரையில் இடம் பெற்று இருந்தது.

இதைத் தொடர்ந்து முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இட ஒதுக்கீடு உயர்வுக்கான மசோதா, இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com