

பாகல்பூர்
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் தயாள்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் சென்று கொண்டிருந்த 2 ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் தனியார் பஸ் ஆகிய மூன்றும், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து பற்றி நவகாச்சியா காவல் துறை கண்காணிப்பாளர் பிரேர்ன குமார் கூறும்போது, விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், சம்பவ பகுதிக்கு சென்றோம்.
தீவிர நிலைமையை கவனத்தில் கொண்டு, அருகேயிருந்த காவல் நிலைய போலீசாரும் உதவிக்கு வந்தனர். விரைவாக வந்த பஸ் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதல்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. காயமடைந்த 11 பேர் சிகிச்சைக்காக பாகல்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தில் பலியான 2 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில், வாகனங்களின் ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.