

பாட்னா,
ஈராக்கில் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் 40 இந்தியர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அதில் ஒருவர் தப்பித்துச் செல்ல மீதி 39 பேரை பயங்கரவாதிகள் கொன்று விட்டதாக சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறினார்.
அந்த உடல்களை கொண்டு வருவதற்காக, மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று அங்கு சென்றார். ஒருவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை.
மீதி 38 பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள், தனி விமானத்தில் ஏற்றப்பட்டன. அந்த விமானம், இன்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. உடல்களை உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டனர்.
38 பேரில், பஞ்சாப் மற்றும் இமாசலபிரதேசத்தை சேர்ந்த 31 பேரின் உடல்கள் மட்டும் அங்கு ஒப்படைக்கப்பட்டன. மீதி 7 உடல்கள், பாட்னா மற்றும் கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் பாட்னாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல் பாட்னா விமான நிலையத்திற்கு 5 பேரின் உடல் வந்தது. பாட்னா விமான நிலையங்களில் அவர்களது உறவினர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது உடல்களுக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.