பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? கடும் இழுபறி

பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி - மெகா கூட்டணி இடையே கடும் போட்டி நீடிக்கிறது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? கடும் இழுபறி
Published on

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.

இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணும் பணி துவங்கியதில் இருந்தே முன்னிலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் மெகா கூட்டணியும் மாறி மாறி சில சுற்றுக்களில் முன்னிலை பெற்றன. இதனால், எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 113 இடங்களிலும் கங்கிரஸ் கூட்டணி 111 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிராக் பாஸ்வானின் கட்சி 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தேர்தல் முடிவு நிலவரங்கள் இதே நிலையில் நீடிக்குமா? அல்லது டிரெண்டிங் மாறுமா? என்பது இன்னும் சில மணி நேரங்களுக்குப் பிறகே தெளிவாக தெரியவரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com