

முசாபர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், சுதிர்குமார் ஓஜா என்ற வக்கீல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில், ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு பேசுகையில், இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் பெருகியதற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததுதான் காரணம் என்று கூறி இருக்கிறார்.
இதுபோன்று இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளை அவர் தெரிவித்து இருக்கிறார். எனவே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனு வருகிற செப்டம்பர் 4ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட்டு ஹரி பிரசாத் அறிவித்தார்.