பீகாரில் அரசு காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம்: கட்டாய கருக்கலைப்புக்கு அறையை அமைத்திருந்த கொடூரம்

பீகாரில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட அரசு காப்பகத்தில் கட்டாய கருக்கலைப்புக்கு அறையை அமைத்திருந்த கொடூரம் தெரியவந்துள்ளது.
பீகாரில் அரசு காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம்: கட்டாய கருக்கலைப்புக்கு அறையை அமைத்திருந்த கொடூரம்
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டது. இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது, மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையில் தெரியவந்தது.

இது தொடர்பாக பீகார் மாநில சமூக நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 42 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 29 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் முசாபர்பூர் போலீசார் பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில முதல்மந்திரி நிதிஷ்குமார், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன்படி இந்த வழக்கை சி.பி.ஐ. நேற்று கையில் எடுத்துக் கொண்டது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவ அறிக்கையில் மேலும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, நேற்று தெரிய வந்தது. இதனால் பாதுகாப்பு இல்லத்தில் காமுகர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது. இதற்கிடையே காப்பகத்தில் சிறுமிகளுக்கு நேரிட்ட கொடூரம் தொடர்பாக அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அரசு காப்பகம் பாலியல் தொழில் செய்யப்படும் இடம்போல் செயல்பட்டு வந்துள்ளது, அங்கு கட்டாய கருக்கலைப்புக்கு அறையும் அமைக்கப்பட்டு இருந்தது என்பது தெரியவந்துள்ளது. பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அங்கேயே கருகலைப்பு செய்யப்பட்டுள்ளது. அது காப்பகமே கிடையாது, மிகவும் கொடூரமான சம்பவங்கள் நடைப்பெற்ற வீடு என்று விசாரணையில் தெரியவருகிறது.

சிறுமிகள் கொடுத்த வாக்குமூலங்கள் நினைத்து பார்க்க முடியாத கொடூரத்தை அவர்கள் சந்தித்துள்ளனர் என்பதை காட்டுகிறது. காப்பகத்தில் இருந்து 67 விதமான மருத்துக்கள் மற்றும் போதை ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com