ஒன்றரை மாதத்தில் 3¾ கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தது, பா.ஜனதா - திட்டமிட்ட இலக்கை தாண்டி சாதனை

ஒன்றரை மாதத்தில், 3¾ கோடி புதிய உறுப்பினர்களை பா.ஜனதா சேர்த்துள்ளது. திட்டமிட்ட இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது.
ஒன்றரை மாதத்தில் 3¾ கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தது, பா.ஜனதா - திட்டமிட்ட இலக்கை தாண்டி சாதனை
Published on

புதுடெல்லி,

பா.ஜனதாவில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கியது. ஜனசங்க தலைவர் சியாம பிரசாத் முகர்ஜி பிறந்தநாளையொட்டி, அன்றைய தினம் வாரணாசியில் பிரதமர் மோடியும், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.

ஏற்கனவே 11 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதில் 20 சதவீத அளவுக்கு, அதாவது 2 கோடியே 20 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாநில அமைப்புகள் முடுக்கி விடப்பட்டன.

உறுப்பினர் சேர்ப்பு பணி, நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) முடிவடைந்தது. இதில், 3 கோடியே 70 லட்சத்து 67 ஆயிரத்து 753 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பா.ஜனதா துணைத்தலைவரும், உறுப்பினர் சேர்க்கை பணி இணை அமைப்பாளருமான துஷ்யந்த் குமார் கவுதம் தெரிவித்துள்ளார். எனவே, திட்டமிட்ட இலக்கை விட கூடுதலாக சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எல்லா மாநிலங்களில் இருந்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை விவரங்கள் வந்த பிறகு இந்த எண்ணிக்கை 5 கோடியை நெருங்கும் என்றும் கவுதம் கூறினார்.

அதிக அளவாக, உத்தரபிரதேசத்தில் 65 லட்சம் பேரும், மேற்கு வங்காளத்தில் 36 லட்சம் பேரும், குஜராத்தில் 34 லட்சம் பேரும், டெல்லியில் 15 லட்சம் பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானவர்கள், மிஸ்டு கால் மூலம் சேர்ந்துள்ளனர். அதே சமயத்தில், கணிசமானோர், கட்சி இணையதளம், மோடி ஆப் வழியாகவும் சேர்ந்துள்ளனர். இந்த தடவை மிஸ்டு கால் கொடுத்தவர்களிடம் பெயர், முகவரி, பின்கோடு, மொபைல் எண் போன்ற விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை சரிபார்க்கும் பணி முடிந்த பிறகுதான், எந்த அளவுக்கு இப்பணி வெற்றிகரமாக நடந்துள்ளது என்று தெரிய வரும்.

உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்ததால், உட்கட்சி தேர்தல் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. முதலில், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். பின்னர், கட்சி தலைவர் தேர்தல் நடைபெறும். அமித் ஷா, மத்திய மந்திரிசபையில் இடம்பெற்றுள்ளதால், அவர் கட்சி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com