பொது சிவில் சட்டம் கொண்டுவர கமிட்டி; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு

உத்தரகாண்டில் மீண்டும் பாஜக ஆட்சியமைந்த உடன் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவர கமிட்டி அமைக்கப்படும் என முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம் கொண்டுவர கமிட்டி; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு
Published on

டேராடூன்,

70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் ஆட்சியமைத்த உடன் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவர கமிட்டி அமைக்கப்படும் என உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், புதிதாக பதவியேற்ற உடன் புதிய பாஜக அரசு உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான திட்டத்தை தயாரிக்க கமிட்டி அமைக்கும். இந்த பொது சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து, நிலம் - சொத்து உரிமை போன்றவற்றில் வெவ்வேறு மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் ஒரே சட்டத்தை வழங்கும்.

பொது சிவில் சட்டம் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கனவை உண்மையாக்கவும், அரசியலமைப்பின் உணர்வை உறுதிபடுதவும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும். இது அனைத்து மக்களுக்கும் பொது சிவில் சட்டத்தை வழங்கும் சட்டப்பிரிவு 44-ஐ நோக்கி முன்னேக்கி செல்லக்கூடிய படியாக இருக்கும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com