அரியானாவின் குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் உடனடியாக திரும்பி வர எடியூரப்பா உத்தரவு

அரியானாவின் குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் உடனடியாக கர்நாடகாவிற்கு திரும்புமாறு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
அரியானாவின் குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் உடனடியாக திரும்பி வர எடியூரப்பா உத்தரவு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கடந்த டிசம்பர் மாதம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது மந்திரி சபையில் இருந்து 2 மந்திரிகள் நீக்கப்பட்டனர். புதிதாக 8 மந்திரிகள் பதவி ஏற்றனர். பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ரமேஷ் ஜார்கிகோளி காங்கிரசை சேர்ந்தவர். மற்றொருவரான சங்கர், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆவார்.

இதையடுத்து இந்த 2 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். காங்கிரசை சோந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தகவல்கள் வெளியாயின. ஆனால் இதுவரை யாரும் பதவியை ராஜினாமா செய்யவில்லை.மந்திரி பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி உள்பட 5-க்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் முகாமிட்டு இருப்பதாவும், அவர்கள் காங்கிரசை விட்டு விலக திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இது கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தகவல்கள் வெளியானது. பா.ஜனதா குதிரைபேர அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தை புறக்கணித்த 4 எம்.எல்.ஏ.க்களில் ரமேஷ் ஜார்கிகோளியை மட்டும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாகவும், மேலும் அவர்கள் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்புவது என்றும் காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் முடிவடைந்ததும், 76 எம்.எல்.ஏ.க்களும் சொகுசு பஸ்கள் மூலம் விதான சவுதாவில் இருந்து பெங்களூரு பிடதி அருகே உள்ள ஈகிள்டன் ரெசார்ட் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அரசியல் நிலைமை சீரடையும் வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அங்கேயே தங்க வைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், அரியானா மாநிலம் குருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் உடனடியாக கர்நடகத்திற்கு திரும்ப வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com