

பெங்களூரு,
பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை முடியும் தருவாயில் உள்ளது. கொரோனா 3-வது அலை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 3-வது அலை உருவாக இன்னும் 3 மாதங்கள் உள்ளன. இந்த 3 மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் 3-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.
கொரோனா தடுப்பூசி பற்றி பா.ஜனதா தலைவர்கள் வெறும் வாய் வார்த்தையில் மட்டுமே பேசி வருகின்றனர். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. மக்கள் மணிக்கணக்கில் ஆஸ்பத்திரிகள் முன்பாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டினாலும், தட்டுப்பாடு காரணமாக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. 3-வது அலையில் மாநிலத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு அரசே முழு பொறுப்பாகும்.
வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு நமது நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டு கொள்ளும்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் கூறி வருவதால், இந்த விவகாரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான முன் ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.