பெண்ணை கன்னத்தில் அறைந்த பா.ஜனதா மந்திரி; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

நில உரிமை பட்டா வழங்கும் விழாவில் பா.ஜனதா மந்திரி சோமண்ணா, பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்ணை கன்னத்தில் அறைந்த பா.ஜனதா மந்திரி; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
Published on

கொள்ளேகால்:

நில உரிமை பட்டா

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹங்கலா கிராமத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு நில உரிமை பட்டா வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், கர்நாடக வீட்டு வசதித்துறை மந்திரியும், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சோமண்ணா கலந்துகொண்டு, மக்களுக்கு நில உரிமை பட்டாக்களை வழங்கினார்.

இந்த விழாவில் ஏராளமானோருக்கு நில உரிமை பட்டா வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பெண்ணை அறைந்த மந்திரி

அப்போது ஒரு பெண் ஒருவர், மந்திரியிடம் தனக்கு அரசு சார்பில் நிலம் வழங்க வேண்டும் என்று கெஞ்சியதாக தெரிகிறது. அப்போது கட்டுக்கடங்காத கூட்டதால், அந்த பெண் தள்ளப்பட்டதால் அவர் மந்திரி மீது விழுவது போல சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மந்திரி சோமண்ணா, அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மந்திரி சோமண்ணாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, மந்திரி சோமண்ணாவ உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

மந்திரி அலுவலகம் வீடியோ

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மந்திரி அலுவலகம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மந்திரி அறைந்ததாக கூறப்படும் பண், தனது குழந்தைகளுடன் பேசினார். அதில், நான் மிகவும் ஏழ்மையில் இருப்பதால் எனக்கு நிலம் வழங்க வேண்டும் என்று மந்திரியின் காலில் விழுந்து கெஞ்சினேன். அப்போது மந்திரி சோமண்ணா என்னை மலே தூக்கி உதவுவதாக கூறினார். அவர் என்னை அடிக்கவில்லை. என்னை மந்திரி அடித்ததாக விளம்பரப்படுத்துகிறார்கள் என்று கூறி உள்ளார்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து மந்திரி சோமண்ணா எந்த பதிலும் அளிக்கவில்லை

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com