பஸ் கட்டண உயர்வை கண்டித்து கர்நாடகாவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலத்தில் பஸ் கட்டண உயர்வு நாளை மறுநாள் காலை முதல் அமலுக்கு வருகிறது.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து கர்நாடகாவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் பஸ் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்திக் கொள்ள கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி கர்நாடகத்தில் குறைந்தபட்சமாக பஸ் கட்டணம் ரூ.2 உயர்கிறது. அதன்படி பெங்களூருவில் இயங்கும் பி.எம்.டி.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணம் முதல் 2 கிலோ மீட்டர் வரை பொருந்தும்.

இந்த பஸ் கட்டண உயர்வு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அமலுக்கு வருகிறது. பஸ் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அக்கட்சிகள் அரசை கண்டித்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்.அசோகன் தலைமையில் பாஜகவினர் மெஜஸ்டிக்கில் உள்ள கெம்பே கவுடா பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே மாநிலத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். பஸ் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com