

இளம்பெண் மரணம்
புனே ஹடாப்சர் பகுதியில் கடந்த 8-ந் தேதி டிக்-டாக் பிரபலமான 23 வயது இளம்பெண் பூஜா சவான் கட்டிடத்தில் இருந்து விழுந்து பலியானார். இளம்பெண்ணின் மரணத்துக்கும், சிவசேனாவை சேர்ந்த வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோட்டிற்கு தொடாபு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. மேலும் பா.ஜனதாவும் இதே குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் போலீசார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
மாநிலம் முழுவதும் போராட்டம்
இந்தநிலையில் பா.ஜனதா மகளிர் அணியினர் நேற்று இளம்பெண்ணின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள மந்திரியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மும்பை, நவிமும்பை, தானே, நாசிக், சிந்துதுர்க், அவுரங்காபாத் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. இதில் ஒரு சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே பெண் மரணத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படும் மந்திரி சஞ்சய் ரதோடை பதவியில் இருந்து நீக்கவில்லையெனில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமூகமாக நடத்த விடமாட்டோம் என பா.ஜனதா எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.