

சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிட தேர்தல் வேலைகளைத் துரிதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி தொகுதி பங்கீட்டை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். இதன்படி பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 65 தொகுதிகளிலும், அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். மேலும் மூன்றாவது கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) கட்சிக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், தேசிய பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் நலன் கருதி மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன என்றும் அவர் கூறினார்.