

கொல்கத்தா,
எனக்கு மாரடைப்பு வர வேண்டும் என பாஜக ஆசைப்படுகிறது. உங்கள் அரசியல் முடிவை பாா்க்கும் வரை உயிரோடுதான் இருப்பேன் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் 2007-ம் ஆண்டு நடந்த நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டம், மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை என்றால், அது மிகையாகாது.
மேற்கு வங்கத்தின் அப்போதைய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அவர் ‘மா, மாட்டி, மனுஷ்’ (தாய், தாய்மண், மக்கள்) என்ற முழக்கம், 2011-ல் அவரை மேற்கு வங்கத்தின் முதல்-மந்திரி ஆக்கியது. ஒரு பயர் பிராண்ட் அரசியல்வாதியாக உருவெடுத்த அவர், டைம்ஸ் இதழின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை அலங்கரித்தார்.
2011 தொடங்கி அடுத்தடுத்து ஆட்சியை தக்கவைத்து மேற்கு வங்க மாநில முதல்-மந்திரியாக ஹார்ட்ரிக்கும் அடித்தார். 4-வது முறையாகவும் அவர் ஆட்சியமைப்பதை அவர் எதிர்பார்த்தார். ஏன் சில கருத்துக் கணிப்புகளும் கூட ‘மம்தா வரலாறு படைப்பார்’ என்றெல்லாம் வரிந்துகட்டி எழுதின.
ஆனால், 2021 சட்டசபை தேர்தலில் 293 தொகுதிகளில் 215 இடங்களில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் 2026 தேர்தலில் வெறும் 80 இடங்களில்தான் வென்றது. 207 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது பாஜக.
சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் நிலைகுலைந்தது. மம்தாவின் தலைமைக்கு எதிராக கட்சி பிளவுபட்டுள்ளது.
கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 58 பேர் அண்மையில் தனி அணியாகப் பிரிந்தனர். இதேபோல், திரிணமுல் காங்கிரசின் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 19 அதிருப்தி எம்.பி.க்கள் தனியாகப் பிரிந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்தநிலையில், உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம் என மேற்குவங்க முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானா்ஜி முகநூல் நேரலையில் பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
தனது அரசியல் சித்துவிளையாட்டுகள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க தீவிரமாக மூக்கை நுழைத்து வருகிறது. தமது கட்சியின் உள்ளே தற்பொழுது நிலவி வரும் கடுமையான உட்கட்சிப் பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்குப் பின்னால் முழுமையாக பா.ஜ.க-வின் சதித்திட்டம் மட்டுமே ஒளிந்திருக்கிறது. கட்சித் தொண்டர்களை குழப்பி பிளவுகளை ஏற்படுத்த டெல்லி தலைமை சதிவலை பின்னுகிறது. இத்தகைய சதிவேலைகளுக்குத் திரிணாமுல் தொண்டர்கள் ஒருபோதும் பலியாக மாட்டார்கள் , ஜனநாயக ரீதியில் பா.ஜ.க-விற்கு உரியப் பாடத்தை மக்கள் விரைவில் கற்பிப்பார்கள்.
கடந்த சில வாரங்களாகத் தமக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த முகநூல் நேரலை அமைந்திருந்தது. "எனது உடல்நிலை குறித்து திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி எனது ஆதரவாளர்களை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள்; எனக்கு எதுவும் ஆகாது, மக்களின் ஆசியும் பேராதரவும் எனக்கு இருக்கும் வரை என்னை யாராலும் அசைக்க முடியாது.
எனக்கு மாரடைப்பு வர வேண்டும் என பாஜக ஆசைப்படுகிறது. உங்கள் அரசியல் முடிவை பாா்க்கும் வரை உயிரோடுதான் இருப்பேன். பா.ஜ.க-வின் வீழ்ச்சியை நேரில் பார்க்கும் வரை தமது அரசியல் போராட்டம் களத்தில் ஓயாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க-விற்கு எதிராக அனல் பறக்கும் வகையில் கருத்துக்களைப் பகிர்ந்து தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி.