

புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்கள் நடக்கிறது. இதில் 3 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் 4வது கட்ட தேர்தல் 23ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. பந்தல்காண்ட் பிராந்தியத்தை உள்ளடக்கிய 12 மாவட்டங்களை சேர்ந்த 53 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.
இதில் சோனியாகாந்தியின் பாராளுமன்ற தொகுதியான ரேபரேலி மற்றும் அலகாபாத், பிரதாப்கர், பதேப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் முக்கியமானவை ஆகும். பா.ஜனதா, பகுஜன்சமாஜ், சமாஜ்வாடிகாங்கிரஸ் கூட்டணியின் பலத்தை சோதிக்கும் முக்கியமான களமாகவும் இந்த 4ம் கட்ட தேர்தல் விளங்குகிறது.
இந்த தேர்தலுக்காக உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரியுமான வெங்கையா நாயுடு கூறியதாவது:- உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் எதிர்க்கட்சிக்கான இடத்தை பிடிக்க போட்டியிடுகின்றன. இந்த இரண்டு கட்சிகளில் எது எதிர்க்கட்சி என்பதை மக்கள் முடிவு செய்வர் என்றார்.
அகிலேஷ் யாதவ், மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மோடிக்கு ஆதரவாக பேசுவதை விமர்சித்து குஜராத் கழுதைகளை விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள் என்று விமர்சித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, மக்கள் முன் நாம் பேசும் போது மக்களின் மொழியில் பேச வேண்டும். மக்களின் குரல் இதுவல்ல என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என்றார்.