தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை: சண்டிகார் மேயர் பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ்

சண்டிகார் மேயர் மனோஜ் சோன்கர் பதவியை ராஜினாமா செய்தார்.
தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை: சண்டிகார் மேயர் பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ்
Published on

சண்டிகார்,

பஞ்சாப் - அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகார் உள்ளது. இதனிடையே, சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர்.

வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி எண்ணினார். காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார்.

ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் மனோஜ் சோன்கர் சண்டிகார் மேயராக பதவியேற்றார்.

இதனிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக்கையின் போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 5ம் தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேர்தல் நடத்திய அதிகாரியை கடுமையாக எச்சரித்தார். தேர்தல் நடத்திய அதிகாரி ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டதாக விமர்சித்தது. மேலும், சண்டிகார் மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரையும் காலவரையின்றி ஒத்தி வைக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 19ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தது.

இந்நிலையில், சண்டிகார் மேயர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மேயர் பதவியை மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்தார். மனோஜ் சோன்கர் தனது பதவியை நேற்று இரவே ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க. தலைமையிடம் ஆலோசனை மேற்கொண்டபின் மனோஜ் சோன்கர் மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேயர் தேர்தல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் மனோஜ் மேயர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் சண்டிகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com