ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களும் ஒருவாரத்திற்குள் இந்தியா கொண்டு வரப்படும்: சுஷ்மா சுவராஜ் உறுதி

ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களும் ஒருவாரத்திற்குள் இந்தியா கொண்டு வரப்படும் என்று சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார். #SushmaSwaraj
ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களும் ஒருவாரத்திற்குள் இந்தியா கொண்டு வரப்படும்: சுஷ்மா சுவராஜ் உறுதி
Published on

புதுடெல்லி,

ஈராக்கில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களும் ஒருவாரத்திற்குள் இந்தியா கொண்டு வரப்படும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

ஈராக் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான மொசூலை கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அப்போது, இந்தியாவின் பஞ்சாப், இமாசலபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மருத்துவமனை கட்டுமான பணிக்காக அங்கு சென்றிருந்த 40 பேர் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்றனர்.

அவர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர். இவர்களின் கதி என்ன ஆனது என்பது உடனடியாக தெரிய வரவில்லை. அப்போதே, இறந்து விட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இந்த சூழலில் கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஈராக்கில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இந்த தகவல், நம்பிக்கையுடன் காத்திருந்த குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில், ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இறந்தவர்களின் உடலை ஒருவாரத்திற்குள் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மத்திய அமைச்சர் விகே சிங், ஈராக் சென்று இதற்கான அனைத்து பணிகளையும் கண்காணிக்க உள்ளதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com