'ராகுல் காந்தியைப் போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர்' - அசாம் முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

போலி நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
'ராகுல் காந்தியைப் போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர்' - அசாம் முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

திஸ்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில் மணிப்பூர் முதல் மும்பை வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதில் கடந்த 18-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டார்.

இந்த யாத்திரையின்போது ராகுல் காந்தி, அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சித்தார். அசாமில் ஊழல் நிறைந்த அரசாங்கம் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இதனிடையே அசாமில் காவல்துறையினருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய ஹிமாந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியைப் போன்ற போலி நபரை யாத்திரையில் பயன்படுத்தி வருவதாக ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் காரணம் இல்லாமல் எதையும் கூறவில்லை. யாத்திரையின்போது ராகுல் காந்தியைப் போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர்.

அந்த போலி நபரின் பெயர் என்ன, இது எப்படி செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் வெளியிடுவேன். சில நாட்கள் காத்திருங்கள்" என்று தெரிவித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com