

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முத்யம் ரெட்டி-மம்தா ரெட்டி தம்பதியின் மகன் மணிதீப் ரெட்டி. இவர் உயர்கல்விக்காக பின்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் மணிதீப் ரெட்டி மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை தொடர்ந்து தேடி வருவதாக பின்லாந்து போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே மணிதீப் ரெட்டியின் பெற்றோர் தங்கள் மகனை யாரோ கடத்திவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்கள் பேசினர். மேலும், தெலுங்கானா முதல்-மந்திரி கிஷன் ரெட்டியிடம் இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் பேசி தங்கள் மகனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க உதவுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், மணிதீப் ரெட்டி காணாமல் போய் சுமார் 65 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் ஹெல்சின்கி நகரில் உள்ள ஒரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக பின்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் மணிதீப் ரெட்டியின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதனை நம்ப மறுத்துள்ளனர்.
இது குறித்து மணிதீப்பின் தாயார் கூறுகையில், “கிடைத்திருக்கும் சடலம் எங்கள் மகனுடையது என்பதை எவ்வாறு உறுதி செய்தார்கள். அவர்கள் இதனை உறுதியாக கூறுவதற்கு முன்பு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும். இந்த வழக்கை விரைந்து முடிப்பதற்காக எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள். பின்லாந்து போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.