

புதுடெல்லி,
உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில், கொரோனா தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் பெரும்பாலும் 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருவதால், கூடுதல் பாதுகாப்பிற்காக 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த முடிவெடுத்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவிலும் 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறுகையில், இந்தியாவின் தரவுகள் தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் தேவையை உணர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த போதிய தரவுகள் தற்போது இல்லை என்றும் தரவுகள் வெளியான பிறகே அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பூஸ்டர் டோஸ் செயல்திறன் குறித்த தரவுகள் வெளியாகும் என்று நம்புவதாக தெரிவித்த அவர் அனைவருக்கும் முடிந்தளவு தடுப்பூசி செலுத்திய பிறகே பூஸ்டர் டோஸ் குறித்து முடிவெடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.