

மும்பை,
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டாங்கா பகுதியில் வசித்து வரும் இக்பால்(வயது 16) என்ற சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள மர்ம நோய் பாதிப்பால் கடந்த ஒரு மாதமாக, எப்போதும் தனது ஊரில் உள்ள குளத்தின் தண்ணீரிலேயே கழுத்து வரை மூழ்கியவாறு இருந்து வந்தார்.
உடல் பருமனான அவருக்கு தண்ணீரை விட்டு வெளியே வந்தால், உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தினர் அழைத்தாலும் தண்ணீரை விட்டு வெளியே வர சிறுவன் மறுத்துவிட்டார். சிறுவன் இக்பாலை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும், அவருக்கு ஏற்பட்ட அரிய நோய் பாதிப்பு குறித்து டாக்டர்களால் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும் மருத்துவ செலவுக்கு அதிக பணம் தேவைப்பட்டதால், இக்பாலின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். இதனிடையே, சிறுவன் இக்பால் குளத்தில் மூழ்கி இருந்தபடி உணவு சாப்பிடுவது, உறங்குவது உள்ளிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த வீடியோ தொழிலதிபர் அம்பானியின் மகனும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஆனந்த் அம்பானியின் பார்வைக்கு சென்றுள்ளது.
இதையடுத்து உடனடியாக அவர், சிறுவன் இக்பாலின் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தார். இதன்படி இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினரை விமானம் மூலம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு வரவழைத்து, அங்குள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவதற்கு ஆனந்த் அம்பானி ஏற்பாடு செய்தார். சிறுவன் இக்பாலுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக ஆனந்த் அம்பானி கூறியுள்ளார். இதன்படி அந்த சிறுவனுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.