பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா

சின்ன சேஷ வாகனத்தில் வந்த மலையப்பசாமியின் வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவில் அம்ச வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை உற்சவரான மலையப்பசாமி தங்க, வைர ஆபரண அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசாமி கிருஷ்ண அவதாரத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சாமி வீதி உலாவின் போது பக்தர்கள் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை அம்ச வாகனத்தில் மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (சனிக்கிழமை) காலை சிம்ம வாகன வீதி உலாவும், இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலாவும் நடக்கிறது. 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை இரவு 7 மணியில் இருந்து 12 மணி வரை நடக்கிறது.




X

logo
Daily Thanthi
www.dailythanthi.com