

புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும், கந்தமால் பகுதியை சேர்ந்த ராஷ்மி என்ற பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகனும், மணமகளும் தங்கள் உறவினர்களோடு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் தர்பா சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனத்தை 3 மர்ம நபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த நிலையில், துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டி மணப்பெண்ணை கடத்திச் சென்றனர். சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் மாப்பிள்ளையும், உறவினர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தர்பா காவல் நிலையத்தில் ஹரிபந்து பட்டேல் புகார் அளித்தார். இதற்கிடையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணப்பெண்ணை கடத்திச் சென்றவர் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், மணப்பெண் ராஷ்மியின் செல்போன் அழைப்புகள் மற்றும் பல்வேறு ஆதாரங்களை வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராஷ்மி தனது முன்னாள் காதலனுடன் இணைந்து இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.
இந்த விஷயத்தில் கடத்தல் என்ற ஒன்று நடைபெறவே இல்லை எனவும், இந்த திட்டத்திற்கு ராஷ்மி தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.