

பாட்னா,
பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு நேற்றைய தினம் திருமணம் நடைபெற இருந்தது. திருமண மேடையில் மணமகனும், மணமகளும் நின்று கொண்டிருந்தனர். உறவினர்கள் திருமண சடங்குகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்திற்குள் புகுந்த நபர் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மணப்பெண் ஆர்த்தியை நோக்கி சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில் ஆர்த்தியை சுட்ட நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
வயிற்றில் குண்டு பாய்ந்து வலியால் அலறித்துடித்த ஆர்த்தியை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆர்த்தியை சுட்ட நபரின் பெயர் தீபந்து என்பது தெரியவந்துள்ளது. காதல் விவகாரம் காரணமாக ஆர்த்தி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீபந்து தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.