

புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் பிரை கமீலா கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் தனது 9 மாத கைக்குழந்தையை அடித்து, துன்புறுத்தும் கொடூர காட்சியை அவரது உறவினர் படம் பிடித்து வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
அது சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது. அந்த கொடிய தாயை கைது செய்யும்படி நெட்டிசன்கள் பலர் வற்புறுத்தினர்.
அந்த வீடியோவில், தனது மடியில் 9 மாத கைக்குழந்தையை வைத்திருக்கும் தாயின் அருகே, மற்றொரு பெண் அமர்ந்திருக்கிறார். இந்நிலையில் அழுத குழந்தையை பார்த்து முதலில் சிரித்த அதன் தாய், திடீரென ஆவேசமடைந்தவராக கழுத்து பகுதியில் இரு கைகளையும் நெருக்கி பிடித்து இறுக்கியுள்ளார்.
அதன்பின்னர் குழந்தையின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் வலி பொறுக்காமல் குழந்தை அலறுகிறது. இதனால், ஆவேசத்தில் தனது குழந்தை என்றும் எண்ணாமல், அதனை தூக்கி படுக்கையில் வீசி எறிகிறார்.
இந்த வீடியோ, குழந்தையின் கணவர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கிராம தலைவருடன் காவல் நிலையத்திற்கு சென்று அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். குழந்தை அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குழந்தையின் தாயிடம் விசாரணை நடந்து வருகிறது.