

புதுடெல்லி,
டெல்லியில் 1,731 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
தங்கள் குடியிருப்புகளை அங்கீகரித்து பட்டா வழங்க வேண்டும் என்பது அந்த மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். அந்த கோரிக்கையை மத்திய அரசு இப்போது ஏற்று, நிறைவேற்றி உள்ளது. இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சட்டமும் இயற்றப்பட்டது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிற வகையில் டெல்லியில் புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் நேற்று பிரமாண்ட நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பொதுக்கூட்டத்தில் பயனாளிகள் 11 லட்சம் பேர் நன்றி தெரிவித்து கையெழுத்து போட்டு கொடுத்த ஆவணம், பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அப்போது கூட்டத்தினர் மோடி, மோடி என்று முழங்கினர்.