

தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் முர்பாத் தாலுகா பகுதியில் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார், டோகாவ்டே அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் டிரைவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரில் இருந்த 4 பேர் கடுமையாக காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழித்தடத்தில் கடந்த ஒரு மாதத்தில் இது 2-வது பெரிய விபத்தாகும். கடந்த மாதம் 13-ந் தேதி நடந்த வேன் – சிமெண்ட் லாரி மோதல் விபத்தில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.