

ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், மலைப்பகுதியில் ககோர் கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதை பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.