

பெலகாவி,
கர்நாடகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசு கூறியுள்ளது. இதையொட்டி கர்நாடகத்தில் இரவில் பஸ் போக்குவரத்து எந்த தடையும் இன்றி இயங்கும் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறினார்.
இதுகுறித்து அவர் பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனாவை தடுக்க இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். அவர் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது என்றும், பஸ்களை வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இரவு 11 மணிக்கு பிறகும் பஸ்களின் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. அதனால் முன்பதிவு செய்துள்ள பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. அவர்கள் பஸ் நிலையங்களுக்கு வந்து பஸ்களில் பயணிக்கலாம். இரவு ஊரடங்கு உத்தரவின் போது (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) பஸ்கள் இயங்கும்.
இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.