

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் சார்ஜாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆல்பிரட் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்து வருகிறார். அவர் தனது நெருங்கிய நண்பருக்கு பரிசளிக்க பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூ.60 ஆயிரத்து 990 மதிப்பிலான கேமராவை ஆர்டர் செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் இருந்து பார்சல் வந்தது. அதனை அவர் பிரித்து பார்த்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கேமரா அட்டைப் பெட்டி இருந்தது. ஆனால் அதனை பிரித்து பார்த்தபோது கேமராவுக்கு பதிலாக அரை கிலோ எடைகொண்ட 2 சலவைத்தூள் பாக்கெட்டுகள் இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த நிறுவனத்தில் இந்த புகாருக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை என்றும், அலட்சியமாக இருப்பதாகவும் ஆல்பிரட் குற்றம்சாட்டியுள்ளார்.