மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி போட்டியா?

மம்தா பானர்ஜி தலைமையிலான அணியும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணியும் தாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று உரிமை கோரி வருகின்றன
மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி போட்டியா?
Published on

கொல்கத்தா:

மேற்குவங்கத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அதில் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரெஜினகர் மற்றும் நந்திகிராம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ரெஜினகர் தொகுதியில் வென்ற ஹுமாயூன் கபீர் எம்.எல்.ஏ பதவி விலகியதை தொடர்ந்து காலியானது. நந்திகிராம் தொகுதியை முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். சுவேந்து அதிகாரி 9,665 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மம்தா பானர்ஜி

தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மீண்டும் நந்திகிராமில் மம்தா போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.மேற்குவங்கத்தில் பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்கள் காரணமாக, கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள். எம்.எல்.ஏவாக மம்தா பானர்ஜி இருந்தால், எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் வலுவாக எழுப்ப முடியும் என்றும், தனது கட்சியை பாதுகாக்க அது உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இடைத்தேர்தலில் போட்டியா?

இதில் நந்திகிராம் தொகுதியே மம்தாவுக்கு சாதகமானதாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அதேவேளையில், ரெஜினகர் தொகுதியில் சுமார் 65 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதால், அந்த தொகுதியும் மம்தாவுக்கு சாதகமாக அமையக்கூடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த 2 தொகுதிகளிலும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது திரிணாமுல் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என்று அக்கட்சியின் சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அவர் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com