

புதுடெல்லி,
கொரோனா தொற்று காரணமாக இந்திய விமான போக்குவரத்து துறை பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டக்கூடும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மே 25-ந் தேதி முதல் நாம் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கினோம். அந்த நேரத்தில் சுமார் 30 ஆயிரம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தனர்.
இன்று நான் தரவுகளை பெற்றேன். அதன்படி உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தீபாவளிக்கும் இந்த ஆண்டின் இறுதிக்கும் இடையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முந்தைய நிலையை நாம் அடையப்போகிறோம் என்றார்.