வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல்

வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. #FMArunJaitely
வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல்
Published on

புதுடெல்லி

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா நாடு திரும்ப மறுத்துவிட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது.

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,723 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மற்றும் அவரது தொழில் கூட்டாளியும், உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்று விட்டனர். இதுபோன்று டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸில் ரூ.389 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையிலான மசோதாவை சட்டமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டிஉள்ளது.

வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு வழக்கை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்ப மறுப்பவர்கள் போன்றவர்களின் சொத்துகளை இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் பறிமுதல் செய்யமுடியும்.

குற்றவாளி என தண்டனை அறிவிக்கப்படாமலே அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும், கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பி செலுத்தவும் இந்த மசோதா அனுமதி வழங்குகிறது.

பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பணமோசடி தடுப்பு சட்டத்தின் மூலம் அமலாக்கத்துறை பறிமுதல் செய்யும். கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு மீதி தொகையை அவர்களிடம் திருப்பி கொடுக்கும். நிரவ் மோடி தப்பி ஓடியதை அடுத்து மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 5-ம் தேதி தொடங்குகிறது.

அப்போது மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா 2018 தலைமறைவாகும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுடைய பினாமிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டு உள்ளது. குற்றவாளிகளின் வெளிநாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்யவும் மசோதாவில் ஷரத்துக்கள் உள்ளது, ஆனால் வெளிநாடுகளின் ஒத்துழைப்பு என்பது அவசியமாகும், என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com