

மும்பை,
மராட்டிய முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்ற பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிசுக்கு, வருகிற 30-ந் தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு கவர்னர் கெடு விதித்து உள்ளார்.
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அவருக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர்.
பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் இன்னும் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவாருக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்று தெரியவில்லை. இதேபோல் சிறிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகள் எத்தனை பேர் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாரதீய ஜனதாவை ஆதரிப்பார்கள் என்பதும் தெரியவில்லை.
எனவே சட்டசபையில் தேவேந்திர பட்னாவிசால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா? என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின்போதுதான் தெரியவரும்.