பெங்களூரு சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்த சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பெங்களூரு இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்த சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்த சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

சட்டப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (காமன் லா அட்மிஷன் டெஸ்ட்) என்பது நாட்டில் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக் கழகங்களில் சட்டப்படிப்புக்காக நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வாகும். பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் 22 தேசிய சட்ட பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகம் சட்டப்படிப்புக்கான இளங்கலை (பி.ஏ. எல்.எல்.பி) நுழைவுத் தேர்வு தனியாக நடத்துவது குறித்து கடந்த 12-ந் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த பல்கலைக் கழகத்துக்கு மட்டும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி இந்திய தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.வெங்கடராவ் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான காணொலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பல்கலைக் கழகம் தனியாக சட்டப்படிப்புக்கான இளங்கலை நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து கடந்த 12-ந் தேதி வெளியிட்ட அறிவிக்கைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் வரும் 28-ந் தேதி நடைபெற உள்ள பொது சட்ட நுழைவுத் தேர்வு முடிவின் அடிப்படையில் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com