இ-பாஸ் நடைமுறை ரத்து: புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தவர் வர தடையில்லை

புதுவையில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலத்தவர் வர தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் நடைமுறை ரத்து: புதுச்சேரிக்கு வெளிமாநிலத்தவர் வர தடையில்லை
Published on

புதுச்சேரி,

புதுவையில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிற மாநிலங்களுக்கு செல்ல சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் விண்ணப்பித்து செல்ல வேண்டும்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தங்கள் மாநிலத்துக்குள்ளும், மாவட்டங்களுக்குள்ளும் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் இ-பாஸ் நடைமுறையை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்ததுபோல் ரத்துசெய்யவேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த 23-ந்தேதி முதல் இ-பாஸ் வழங்குவது கைவிடப்பட்டது. அதற்கான இணையதளத்தின் முகப்பிலேயே மத்திய அரசின் உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தமிழகம் போன்ற மாநிலங்களில் இன்னும் இ-பாஸ் நடைமுறை உள்ளது. புதுவையில் இ-பாஸ் வழங்கப்படாததன் காரணமாக புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

புதுவையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வரலாம். அவர்களுக்கு புதுவை எல்லையில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

புதுவை மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் விண்ணப்பித்து அவர்கள் வழங்கும் இ-பாஸ் மூலம் அந்த மாநிலங்களுக்கு செல்லலாம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com