இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய மந்திரி நட்டா தகவல்

நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய மந்திரி நட்டா தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார். முக்கியமாக, புற்றுநோய் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இதில், ஆண்களில் பெரும்பாலும் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயும், பெண்களில் மார்பக புற்றுநோயும் காணப்படுகிறது.

புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவை கண்காணிக்கப்பட்டு அரசால் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பொதுவாக பயன்படுத்தும் மருந்துகள் ஆகும். இந்த பட்டியலில் இல்லாத 28 கலவைகளும் உள்ளன. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மற்றும் அரசும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளன.

இவ்வாறு புற்றுநோய்க்கான மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் சுமார் ரூ.294 கோடி வரை புற்றுநோயாளிகளுக்கு மிச்சமாகிறது. இதைப்போல குறைந்த செலவில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com