

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதில் குணமடைந்தபோதிலும், அவருக்கு அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே, தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில், இதயத்தில் ஒரு ரத்தக்குழாயில் 90 சதவீத அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அடைப்பை நீக்க அசோக் கெலாட்டுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. வெற்றிகரமாக ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக மருத்துவ கல்லூரி முதல்வர் சுதிர் பண்டாரி தெரிவித்தார். இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் முழுஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக கூறினார். தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவதாகவும் அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.