

பெங்களூரு,
வீடுகளில் கணவரின் பெற்றோரை கவனிப்பது மருமகளின் பொறுப்பு அல்ல என்றும், அதுபோல் பெண் தனது தாய் வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்க தேவையில்லை என்றும் கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடும்ப நல கோர்ட்டு ஒரு விவாகரத்து வழக்கில் மனைவி, குழந்தைக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது நீதிபதி சில்லா குர் சுமலதா விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை யின் போது, கணவர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், "எனது கட்சிக்காரரின் மனைவி கணவரின் பெற்றோரை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை. சரியாக வீட்டு வேலை களை செய்யவில்லை. கணவரின் அனுமதி இல்லாமல் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு பல முறை சென்றார்" என்றார்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் கூறியுள்ள அம்சங்கள் வருமாறு:- மனைவி வீட்டு வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று கூற முடியாது. பெற்றோரை கவனித்துக் கொள்ளும் முதன்மை பொறுப்பு மகன், மகளுக்கு உள்ளது. இதில் மருமகனுக்கோ அல்லது மருமகளுக்கோ அந்த பொறுப்பு இல்லை. இந்திய பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்ல கணவர் வீட்டில் உள்ள அனைவரின் அனுமதியை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.
திருமணம் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் விருப்பத்தை கட்டுப்படுத்துவது, அவர் மீது ஆதிக்கம் செலுத்துவது அல்லது அவரை தன்வசம் எடுத்துக்கொள்ள வழங்கும் உரிமம் அல்ல. ஒரு பெண் தனது விருப்பத்தின்படி பெற்றோர் வீட்டுக்கு செல்வது அவரது அடிப்படை உரிமை. மனைவி தனது விருப்பத்துக்கு ஏற்றப்படி இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.