பேத்தியை சிகரெட் புகைக்க கட்டாயப்படுத்திய தாத்தா மீது வழக்கு

உத்தர பிரதேசத்தில் பேத்தியை சிகரெட் புகைக்க கட்டாயபடுத்திய தாத்தா மீது வழக்கு பதிவாகி உள்ளது.
பேத்தியை சிகரெட் புகைக்க கட்டாயப்படுத்திய தாத்தா மீது வழக்கு
Published on

உன்னாவ்,

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரில் தாத்தா ஒருவர் தனது பேத்தியிடம் சிகரெட் ஒன்றை கொடுத்து புகைக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அதனை வாங்கிய அந்த சிறுமி, ஆவலுடன் சிகரெட்டை வாயில் வைத்து புகையை இழுக்கிறது.

அதன் பின்னர், ஒரு தேர்ந்த சிகரெட் புகைப்பாளர் போல் புகையை வெளியே விடுகிறது. பின்பு ஏதோ சாதனை படைத்ததுபோல் தாத்தாவை பார்த்து சிரித்து கொள்கிறது. அவரும் சிரித்து கொள்கிறார்.

இதுபற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானது. இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு துறை புகார் ஒன்றை பதிவு செய்துள்ளது. எனினும், விசாரணை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

இதுபற்றி அந்த துறையின் உயரதிகாரி சஞ்சய் மிஷ்ரா கூறும்போது, 2 மாதங்களுக்கு முன்புதான் இந்த விவகாரம் தனது கவனத்திற்கு வந்தது. சிறுமியுடன் அவரது தாயும் வந்து சென்றார். சிறுமியை குழந்தைகள் நல குழு முன் ஆஜர்படுத்தினோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தாத்தா மற்றும் மாமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த சிறுமியின் தாய் கூறும்போது, எனது மகளை புகைக்க சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என அவர்களிடம் கெஞ்சி கேட்டு கொண்டேன். அதனை தடுத்து நிறுத்த முயன்றேன்.

ஆனால், 2 பேரும் என்னையும், எனது மகளையும் திட்டினர். அனைத்து நம்பிக்கையும் போன பின்பே, அவர்களுக்கு எதிராக புகார் அளித்தேன் என கூறியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com