இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர்

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் பிர்பூம் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்பிரதா மண்டல். இவர் போல்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிட்டன் ஹல்தருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆபாசமாக பேசி, இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்த மிரட்டல் தொடர்பாக இன்ஸ்பெக்டர் லிட்டன் அளித்த புகாரின் அடிப்படையில் அனுப்பிரதா மண்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மிரட்டல் தொடர்பாக அனுப்பிரதா மண்டல் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதேவேளை, கால்நடை கடத்தல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மண்டல் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ- ஆகியவற்றால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட மண்டல் தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.