

பூரி,
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்தின் ரத யாத்திரை விழா உலக புகழ் பெற்றதாகும். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்த ரதயாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது.
இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை கடந்த 12-ந் தேதி தொடங்கியது. ரத யாத்திரையை முன்னிட்டு 11-ந் தேதி இரவு 8 மணி முதல் 13-ம் தேதி இரவு 8 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ரத யாத்திரையில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ரத யாத்திரை நடந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 12-ந் தேதி நடந்த யாத்திரையின் போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி 15 பேர் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். கண்காணிப்பு கேமரா மற்றும் டிரோன் கேமரா மூலமாக அவர்களை போலீசார் அடையாளம் கண்டனர். இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய அந்த 15 பேர் மீது போலீசார் குற்ற வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.