தர்ப்பூசணி சாப்பிட்ட பின் 4 பேர் பலியான விவகாரம்: தடயவியல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

எலி மருந்து தர்பூசணிப் பழத்திற்குள் எப்படி வந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது
தர்ப்பூசணி சாப்பிட்ட பின் 4 பேர் பலியான விவகாரம்:  தடயவியல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்
Published on

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பைதோனி பகுதியில் கடந்த ஏப்ரல் 26-ந்தேதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்பூசணிப் பழம் சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு நச்சுத்தன்மையே அவர்களது மரணத்திற்கு காரணம் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது தடயவியல் சோதனையில் அந்தப் பழத்தில் எலி மருந்து கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25-ந்தேதி இரவு, அப்துல்லா டோகாடியா (44) தனது குடும்பத்துடன் உறவினர்களுக்கு விருந்து அளித்துள்ளார். அனைவரும் பிரியாணி சாப்பிட்டு முடித்த பிறகு, நள்ளிரவு 1 மணியளவில் அப்துல்லா, அவரது மனைவி நஸ்ரின் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகிய 4 பேர் மட்டும் தர்பூசணிப் பழத்தை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, காலை 5 மணியளவில் 4 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

இவர்களது உடல் உறுப்புகள் மற்றும் மீதமிருந்த தர்பூசணிப் பழத்தை சோதித்த தடயவியல் நிபுணர்கள், அதில் ‘ஜிங்க் பாஸ்பைடு’ என்ற மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த எலி மருந்து கலந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். பலமுறை நடத்தப்பட்ட தீவிர பரிசோதனைக்குப் பிறகே இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எலி மருந்து தர்பூசணிப் பழத்திற்குள் எப்படி வந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. யாராவது திட்டமிட்டு பழத்திற்குள் விஷம் செலுத்தினார்களா? அல்லது குடும்பமே தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com